பன்னிரெண்டாம் வகுப்பு 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தாண்டு மருத்துவ கல்வி சேர்க்கை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

 


ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


+2 மதிப்பெண்கள் அடிப்படையில், இந்தாண்டு மருத்துவ கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும், மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடனான பல்வேறு இட ஒதுக்கீடு விவகாரங்கள் குறித்து விளக்கமளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்படும் 50 % இட ஒதுக்கீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த 2020 ஜனவரி 13 அன்று கடிதம் எழுதியது.

அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 11 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மனு தாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.




அதனை தொடர்ந்து, ஜூன் 16 அன்று உயர்நீதிமன்றத்திலும், ஜூலை 2 அன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கையும் தமிழக அரசு தொடர்ந்தது. ஏழை எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதுள்ள சூழலில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் கடினம் எனவும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நேற்று (ஜூலை 8, 2020) பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஓ பி சி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்போருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.


8 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள வளமான பிரிவினருக்கு (Creamy layer) இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இந்த வருமானத்தை கணங்க்கிடும் போது இதுவரை ஊதியம் மற்றும் விவசாயம் வருமானம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

தற்போது, இந்த வருமானத்தை கணக்கிட ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாயின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு, "இட ஒதுக்கீடு சமூக, கல்வி அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் வழங்குவது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

எனவே, மத்திய அரசு பணிகளில் ஓ பி சி பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டுக்கு வருமான உச்ச வரம்பில், ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுக்காமல், தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்